அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது. முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள். மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி... வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!
top of page
CHF 29.90Price
bottom of page

