வரலாற்றைப் பின்னணியாக வைத்துப் பல கட்டுரைகளும் சிறுகதை களும் எழுதியவர் தி.நா. சுப்பிரமணியம். ஒருமுறை அவரிடம் நான் சரித்திரக் கதைகள் எழுத ஆசைப்படுவதாகச் சொன்னபோது, 'வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலம் ரொம்பச் சுவாரஸ்யமானது. அதற்கான தகவல்களும் வண்டி வண்டியாகக் கன்னிமரா லைப்ரரியில் கிடைக்கும். அதை வைத்து எழுது' என்றார்.
சென்னை கார்ப்பரேஷனின் மூன்றாவது நூற்றாண்டையொட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு கட்டுரையில், சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக ஒரு கட்டுரை படித்தேன்.
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் என்பவர் அந்த நாளில் சின்னச் சின்ன வாக்கியங்களில் விறுவிறுப்பாகக் கதை கட்டுரைகள் எழுதி வந்தார். அவருடைய நடை என்னை மிகவும் கவர்ந்தது.
எடிட்டர் எஸ்-ஏ. பி. அவர்கள் 'The Man From Rio' என்ற ஆங்கில படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதில் வரும் உல்லாசமான, உற்சாகமான, ஆபத்துக்களைச் சிரித்துக் கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல 'அடிமையின் காதல் ' கதாநாயகனைப் படைக்கும்படி யோசனை சொன்னார்.
இவை எல்லாமாகச் சேர்ந்ததுதான் ''அடிமையின் காதல்''
முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் வரை கதாநாயகனுக்குச் சரியான பெயர் கிடைக்காமல் காஞ்சிபுரத்தான் என்று குறிப்பிட்டு வந்தேன். பிறகு அதையே நிரந்தரமாக வைத்து விட்டேன். தி.மு.க. கட்சியும் அறிஞர் அண்ணாவும் ஆட்சிப் பீடத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயமாகையால் 'காஞ்சிபுரத்தான்' என்ற பெயருக்கு மவுசு கூடியது.
- ரா.கி. ரங்கராஜன்
top of page
CHF 20.00Price
Out of Stock
bottom of page

