சைவ இலக்கியம் என்ற வகையில் மெய்கண்டார் (கி.பி. 1232) முதல் இடத்தைப் பெறுகிறார். இன்றைய சைவ சித்தாந்த மரபைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். இவர் இயற்றிய ஒரே நூல் சிவஞான போதம் ஆகும். இவர் நடுநாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் திருப்பெண்ணாடத்தில் பிறந்தார். கயிலாயத்தில் சிவஞான உபதேசம் பெற்று, பரஞ்சோதி முனிவர் வானவீதியில் சென்றபோது, மெய்கண்டார், குழந்தையாக வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அக்குழந்தையிடம் வந்து, தான் பெற்ற சிவஞானத்தை அதற்கு உபதேசம் செய்தார். சிவஞானம் பெற்ற மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் சித்தாந்த சாத்திர நூல். மெய்கண்டாரிடம் 49 மாணாக்கர் இருந்ததாகக் கூறுவர். தமக்குப்பின் சிவஞானத்தைப் பரப்பி, சைவ ஆசாரிய பரம்பரையை வளர்த்துவர அருணந்தி சிவாசாரியாரைப் பணித்துவிட்டு மெய்கண்டார் இறைவன் திருவடியடைந்தார்.சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்குப் போதிக்கும் (உணர்த்தும்) நூல் சிவஞானபோதம் எனப்படும். சிவஞானபோதம் நூற்பாவால் ஆகிய 12 சூத்திரங்களும் (40 வரிகள்), பொல்லாப்பிள்ளையார் வணக்கம், அவையடக்கம் என்ற இரு பாடல்களும் கொண்டது. இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்கள் என இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது.
top of page
13,00 CHFPreis
bottom of page

